Sunday 28 June 2015


nikCfpy.jpg




நம் வீடுகளில் பிராட்பேண்ட் இணைப்புடன் வை - பி இணைக்கப்பட்டு பயன்படுத்தும் பழக்கம் பெருகி வருகிறது. இதற்குக் காரணம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் மட்டுமே புழங்கி வந்த வீடுகளில், லேப்டாப் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி.க்கள், ஸ்மார்ட் போன்கள் எனப் பல வகையான மொபைல் சாதனங்களை ஒரே வீட்டில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளோம். இவற்றுடன் நம் டிவி சாதனங்களும் ஸ்மார்ட் டி.வி. சாதனங்களாக மாறி வருவது இன்றைய நடைமுறையாக உள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், பலரும் குறைபட்டுக் கொள்ளும் நிலை வை பி இணைப்பின் வேகம் ஆகும். நிறுவிய சில மாதங்களிலேயே, வை பி இணைப்பின் வேகம் குறைவதும், அதன் ரேடியோ அலைகள் வீச்சின் சுற்றளவு குறைவதும் காணப்படுகிறது. வை பி ரெளட்டர் சாதனம் உள்ள அறையைத் தாண்டி அடுத்த அறைகளுக்குச் சென்றால், இணைப்பே கிடைக்காத நிலை, அல்லது அடிக்கடி இணைப்பு விலகும் நிலை, இணைப்பின் வேகம் குறையும் நிலை எனப் பல்வேறு சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். இதற்கான தீர்வுகள் நம் கைகளிலேயே உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.



வை பி ரெளட்டர் அமைக்கும் இடம்:

KsGLLmK.jpg
வை பி ரெளட்டர் அமையும் இடத்தினை மிக எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனை வைத்து இயக்கும் இடமும் அதன் வேகம், அலைவீச்சின் தூரத்தை நிர்ணயம் செய்திடும். பாதுகாப்பான இடம் என்று கருதி, நாம் பார்க்க இயலாதபடி, ஏதேனும் சிறிய பீரோ, அல்லது மரப் பெட்டி அல்லது தொலைக்காட்சிப் பெட்டியின் பின்புறம் வைக்கக் கூடாது. மிகச் சிறந்த இடம் என்று சொன்னால், அது நம் வீட்டின் மையப் பகுதிதான். அல்லது, நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் சமமான தூரத்தில் அமையும் இடம் தான். நாம் பயன்படுத்தும் சாதனங்கள், ரெளட்டரின் அருகே இருந்தால், அவற்றை ஈதர்நெட் கேபிள்கள் கொண்டு, ரெளட்டருடன் இணைத்துப் பயன்படுத்துவது அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும். வீடுகளில் உள்ள செங்கல் சுவர்கள் அல்லது உலோகத் தடுப்புகளுக்கு அருகே ரெளட்டரை வைத்து இயக்கக் கூடாது. இவை இச்சாதனம் அனுப்பும் அலைகளைத் தடுக்கும். 



பாதுகாப்பு வளையம் தேவை: 


நம் ரெளட்டர் இயக்கத்திற்கு பாதுகாப்பு தேவை. இது வேறு ஒன்றையும் குறிக்கவில்லை. ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து அதனை நமக்கு மட்டுமே உரிமையுடையதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில், நம் நெட்வொர்க்கினை அருகில் வசிப்பவர் ஹைஜாக் செய்து கொண்டு செல்வார். நாம் அறியாமல் அவர் பயன்படுத்தினால்,  நிச்சயம் நமக்குக் கிடைக்கும் அலைவரிசையின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும். பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பினை ஏற்படுத்திவிட்டால், இந்தப் பிரச்னைக்கு வழி இல்லை. உங்களுக்கு அருகில் வசிப்பவர் தன் டேப்ளட் அல்லது ஸ்மார்ட் போனுடன் உங்கள் வீட்டிற்கு வந்து, நட்போடு பேசிக் கொண்டிருக்கையில், உங்கள் வை பி இணைய இணைப்பின் பாஸ்வேர்ட் கொடுங்கள். 


அவசரமாக இணையம் பார்க்க வேண்டியுள்ளது என்று கேட்டு, உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் கொடுத்துவிட்டால், அவர் வெளியேறியவுடன், பாஸ்வேர்டை மாற்றிவிடவும். இல்லை என்றால், அவர் உங்கள் அருகில் உள்ள அவர் வீட்டில் இருந்தவாறே பாஸ்வேர்ட் இடாமலேயே, வை பி இணைப்பினைப் பயன்படுத்த முடியும்.


டி.வி. வீடியோ பயன்படுத்த நேரம்: 

வை பி இணைய இணைப்பின் தன்மை, அதனைப் பயன்படுத்தும் சாதனங்களின் தன்மையைப் பொறுத்தும் அமையும். நீங்கள் மிக அதிகமாக வீடியோ அல்லது இணைய டிவி பயன்படுத்துபவராக இருந்தால், இது நீங்கள் மற்ற விஷயங்களுக்கு இணையத்தைப் பயன்படுத்துவதைப் பாதிக்கும். எனவே, வீடியோ மற்றும் இணைய டிவி போன்றவற்றைப் பயன்படுத்த தனி நேரம் ஒதுக்குங்கள்.



மிகப் பெரிய வீடா? ரிபீட்டர் பயன்படுத்துக:


d8pSTrP.jpg

உங்கள் வீடு பல படுக்கை அறைகள் அல்லது மாடி கொண்டதா? அப்படியானால், வை பி இணைய இணைப்பு சில இடங்களில் மிக மிகக் குறைவாகவோ, அல்லது இல்லாமலோ இருக்க வாய்ப்பு உண்டு. இது போன்ற இடங்களில், ரிபீட்டரைப் பயன்படுத்துங்கள். இது அலுவலகங்களுக்கும் பொருந்தும். ரிபீட்டர் பொதுவாக மலிவான விலையிலேயே கிடைக்கும். சில ரெளட்டர்கள் இது போன்ற “அணுகல் வழி முனைகளை” ("access point") பயன்படுத்தும் வகையிலான வசதிகளைக் கொண்டதாகவே இருக்கும். அவற்றைப் பயன்படுத்துகையில், இது போன்ற ரிபீட்டர்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்தலாம்.
ரெளட்டருக்குச் செலவு செய்திடத் தயங்க வேண்டாம்


நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ரெளட்டர் நவீன வசதிகள் கொண்டதாக இருக்கட்டும். விலை குறைவானதாக வாங்கினால், அனைத்து பிரச்னைகளும் வரத் தொடங்கும். எனவே, வாங்கும்போது, சற்று செலவு கூடுதலாக இருந்தாலும், நல்ல நவீன ரெளட்டராக வாங்கி இணைக்கவும். இது சில ஆண்டுகளுக்காவது, எந்தப் பிரச்னையையும் தராது. வாங்கும்போதே, அதற்கான ரிபீட்டரையும் வாங்கி, வீட்டின் மறுபுறம் உள்ள அறையில் வைத்து இயக்கவும்.

4ஜி அலைவரிசைத் தொடர்பு

sAErQx2.jpg
இந்தியாவில், தகவல் தொழில் நுட்பத் துறையின் பெரிய எதிர்பார்ப்பு தற்போது 4ஜி அலைவரிசைத் தொடர்பு குறித்துத் தான். அண்மையில் நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்திற்குப் பின்னர், பலரும் இது குறித்துப் பலமான எதிர்பார்ப்புகளை மேற்கொண்டுள்ளனர். 4ஜி, இந்தியாவில் டேட்டா பரிமாற்றத்தில் புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அது நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.
சீனாவிற்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையில், மொபைல் போன் பயனாளர்களைக் கொண்டுள்ள இந்தியாவில், 4ஜி பயன்பாடு வளராமல், இன்னும் பெரும்பாலான பயனாளர்கள், 2ஜி நெட்வொர்க் சேவையினையே பயன்படுத்தி வருவதற்கு, இவர்களின் வாங்கும் நிலைக்கேற்ற போன் சாதனங்களும், 4ஜி கட்டணத் திட்டங்களும் இல்லாமையே காரணங்களாகும். இதனைச் சரி செய்திட நாம் பிற நாடுகளை நோக்காமல், நம் பயனாளர்களின் பயன் தன்மையிலிருந்துதான் அறிந்து கொள்ள வேண்டும். டேட்டா பெற்று பயன்படுத்தும் வகைகள், வாடிக்கையாளரின் தன்மைகள், பொருளாதார நிலைகள் மற்றும் சார்ந்த பிறவுமே, நிலைமையச் சீராக்க நமக்கு உதவும் என இந்திய செல்லுலர் ஆப்பரேட்டர்கள் அமைப்பின் தலைவர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ”தேவை, கட்டணம் குறித்து வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், வாடிக்கையாளர் எப்படிப்பட்ட டேட்டா பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் மற்றும் பிற தகவல்களை, இந்தப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் அறிந்து, அவற்றின் அடிப்படையில் தங்கள் திட்டங்களை அமைக்க வேண்டும்.”
ok5GchO.jpg?1
இந்தியாவில், 3ஜி அலைவரிசைப் பயன்பாடு பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. பயனாளர்கள், இன்னும் பழசாகிப் போன 2ஜி அலைவரிசைத் தொடர்பினையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 3ஜி இந்தியாவில் மிகவும் மந்த நிலையில் மேற்கொள்ளப்படுவதற்கு, அதற்கான கட்டணமே முதன்மைக் காரணமாக இருந்து வருகிறது. இந்த பிரிவில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய லாப விகிதத்தினைப் பெருக்குவதற்கே முதலிடம் தந்து வருகின்றனர். மிக அதிகமாகிப் போன ஸ்பெக்ட்ரம் கட்டணத்தினால், குறைந்த கட்டணத்தில் 3ஜி இணைப்பினை மக்களுக்குத் தர முடியவில்லை என இவர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். 2014 முடிவில் 10 கோடி பேர் 3ஜி பயனாளர்களாக இருந்தாலும், இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது 2ஜி அலைவரிசை தொடர்பினைத்தான்.
தற்போது இந்த சூழ்நிலை மாறிவருகிறது. ஒருங்கிணைந்த 4ஜி உரிமத்தினைப் பெற்றுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இதனை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில குறிப்பிட்ட மண்டலங்களில் 4ஜி இயக்க, உரிமம் பெற்றுள்ள பாரதி ஏர்டெல் நிறுவனமும், தன்னுடைய கட்டணத் திட்டங்களில் பெரும் அளவு குறைத்ததுடன், பல சலுகைகளையும் தரத் தயாராகி வருகிறது. தற்போது இந்த முயற்சியில் வீடியோகான் நிறுவனமும் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலைகளில், இந்தியாவில் 4ஜி சேவையுடன், இணையச் சந்தை சிறப்பானதாக அமையும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
4ஜி வெற்றி பெறுவதற்கு, மக்களின் ”வாங்கும் நிலையே” முக்கிய காரணமாக இருக்கப் போகிறது. ரிலையன்ஸ் நிறுவன அதிபரும் இதனையே தன் குறிக்கோளாகக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ. 5,000க்கும் குறைவான விலையில், 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறார். மற்ற நிறுவனங்களுடனும் இதே போல் குறைவான விலையில், 4ஜி நெட்வொர்க் போன்களையும், பிற டிஜிட்டல் தொடர்பு சாதனங்களையும் கொண்டு வர பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
8gMkqdf.jpg?1
”இனிமேல், பிராட்பேண்ட் இணைய இணைப்பு மற்றும் பிற டிஜிட்டல் சேவைகள், ஓர் ஆடம்பர வசதியாக இந்தியாவில் கருதப்பட மாட்டாது” என உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 22 ஆவது இடத்தைப் பெற்றுள்ள ரிலையன்ஸ் அம்பானி, தன் நிறுவனப் பங்குதாரர்களின் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனமும் தன் 4ஜி டேட்டா திட்டங்களுக்கான கட்டணத்தை 31% வரை குறைத்துள்ளது. ஏறத்தாழ 3ஜி அலைவரிசைக்கான கட்டண அளவிலேயே, 4ஜி கட்டணத்தையும் அமைத்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோ தன் 4ஜி நெட்வொர்க்கினை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரும் முன்னர், பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களைத் தன் பிடியில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே, 2ஜி டேட்டா கட்டணத்தில் 4ஜி சேவையை வழங்கத் திட்டமிடுவதாக அறிவித்துள்ளது. இதனால், 4ஜி சேவை வழங்குவதில் நிறுவனங்களுக்கிடையே நிச்சயம் நல்ல போட்டி இருக்கும் என்றும், இதனால், மக்களிடையே 4ஜி பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் அரசும் சில வழிமுறைகளைக் காட்ட வேண்டும். குறிப்பாக, நெட்வொர்க் இயங்குவதில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.  ஏற்கனவே, ரோமிங் கட்டண விகிதங்கள், உரிமங்கள் புதுப்பித்தல் ஆகியவற்றில் அரசின் கொள்கைகள் நிறுவனங்களிடையே ஒரு தெளிவற்ற நிலையை மேற்கொள்ளவே உதவின. இதனைத் தவிர்த்து, உறுதிப்பாடான நிலையை மேற்கொண்டு, தன் நிலையை அரசு நிறுவனங்களுக்கு உணர்த்த வேண்டும்.
வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, 4ஜி அலைவரிசைப் பயன்பாடு, அதிவேக டேட்டா பரிமாற்றம் ஆகியவற்றை விரும்புபவர்களாகவே இருக்கின்றனர். இவர்களின் தேவைக்கேற்பவும். வாங்கும் நிலைக்கேற்பவும், நிறுவனங்கள் திட்டங்களை அமைத்துத் தந்தால், நிச்சயம் 4ஜி அலைவரிசைப் பயன்பாடு மக்களிடம் அதிகம் பரவும் வாய்ப்புண்டு.

ஆண்ட்ராய்ட் எம் (Android M ) - அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

தன்னுடைய 2015 ஆம் ஆண்டுக்கான, செயலிகள் உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கில், கூகுள் தன் அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களைத் தந்தது. ஆண்ட்ராய்ட் எம் என்ற பெயரில் வர இருக்கும் இந்த சிஸ்டம் தற்போதைய வசதிகள் பலவற்றை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. கூகுளின் அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தும் அனுபவத்தினை முழுமையாக சிறப்பானதொன்றாகத் தரும் இலக்கினை கூகுள் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் டேட்டா பரிமாறிக் கொள்ளும் பாங்கில் புதிய மேம்பாடு தரப்பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டமைப்பில், பயனாளர்கள் ட்விட்டர் பயன்பாட்டிற்கான லிங்க்கினைத் தேர்ந்தெடுக்கையில், குரோம் பிரவுசர் வழி வேண்டுமா அல்லது ட்விட்டரின் அதிகார பூர்வ பிரவுசர் வேண்டுமா எனக் கேட்டு நாம் தேர்ந்தெடுப்பதற்காகக் காத்திருக்கும். ஆனால், இப்போது, ட்விட்டரில் கிளிக் செய்தால், ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அப்போது எந்த அப்ளிகேஷன் மிகச் சிறந்தது எனத் தேர்ந்தெடுத்து இயக்கும். ஆனால், வேறு ஏதேனும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷனை இதற்கென நிறுவியிருந்தால், ஆண்ட்ராய் எம் என்ன செய்திடும் என்று கூகுள் அறிவிக்கவில்லை. கூகுள், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், டேப்ளட் பி.சி.க்களிலும் இயங்கும் பேட்டரியின் பயன்பாட்டு காலத்தினை அதிகப்படுத்தும் வகையில் சிஸ்டத்தினை மேம்படுத்தியுள்ளது. இந்தப் புதிய வழிமுறைக்கு Doze எனப் பெயரிட்டுள்ளது. இயங்காத போது, பல நாள் இயக்கப்படாத செயலிகளை முடக்கி வைப்பதன் மூலம், பேட்டரியின் சக்தி சிக்கனப்படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம், யு.எஸ்.பி. டைப் சி வகையினைப் பயன்படுத்த கட்டமைப்பினைத் தருகிறது. சாதனங்களை சார்ஜ் செய்வதற்குப் புதிய வரைமுறைப் பயன் கிடைக்கிறது. இதன் மூலம், குறிப்பிட்ட மொபைல் போனை சார்ஜ் செய்திட வேண்டுமா அல்லது அதன் மூலம் வேறு ஒரு சாதனத்தினை சார்ஜ் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்திடலாம். எடுத்துக் காட்டாக, ஒரு ஆண்ட்ராய்ட் எம் டேப்ளட் பி.சி.யில் யு.எஸ்.பி. டைப் சி கனக்டர் கொண்டிருந்தால், அது ஒரு ஸ்மார்ட் போனையும் சார்ஜ் செய்திடலாம். அல்லது அந்த ஸ்மார்ட் போன் மூலம் தன்னையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தின் இன்னொரு புதிய வசதி, விரல் ரேகை ஸ்கேனர். டச் ஐ.டி. உள்ள ஐபோனில் உள்ளதைப் போல, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களும் தங்கள் விரல் ரேகையைப் பயன்படுத்தி போன்களை இயக்கவும் மூடவும் செய்திடலாம். பணப் பரிமாற்றத்தினையும் மேற்கொள்ளலாம். மொபைல் வழி நிதி பரிமாற்ற வழியில், கூகுள் 'ஆண்ட்ராய்ட் பே' (Android Pay) என்ற ஒரு திட்டத்தை இந்த கருத்தரங்கில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கட்டமைப்பு என்.எப்.சி. தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய வணிக நிலையங்களில் என்.எப்.சி. வழி நிதி பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். அமெரிக்காவில், 7 லட்சம் விற்பனை மையங்கள், இந்த ஆண்ட்ராய்ட் பே சிஸ்டத்தில் இயங்குவதற்கு ஒத்துக் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதனை அறிவித்த கூகுள், பழைய கூகுள் வாலட் திட்டம் குறித்தும், அதன் இன்றைய நடைமுறை குறித்தும் எதுவும் பேசவில்லை. இணைய இணைப்பில் படிப்பது என்பதும் தகவல்களைத் தேடுவதும் பழக்கமாகிவிட்டதனால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் Chrome Custom Tabs என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலிகள், தங்களுக்கென தனியே ஒரு குரோம் டேப் ஒன்றினைத் தங்களுக்கானதாய்க் கொள்ளலாம். இதில் கிளிக் செய்தால், அந்த செயலிக்குள்ளாக, ஒரு குரோம் பிரவுசர் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பிரவுசர் விண்டோ, குறிப்பிட்ட செயலி போலவே தோற்றமளிக்கும். இதன் மூலம் செயலிகளை இயக்கி, அதில் படிவங்களை நிரப்பலாம். நிரப்புவதற்குத் தேவையான தகவல்கள், குரோம் பிரவுசரிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த குரோம் பிரவுசரில் மட்டும் ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது இயங்கும்போது, இணைய இணைப்பின் வேகம் குறைந்தால், தரவிறக்கப்படும் தளத்திலிருந்து, அதிக டேட்டாவினைக் கொண்டிருக்கும் படங்கள், ஆப்ஜெக்ட்கள் பிரிக்கப்பட்டு, தளத்தில் உள்ள டெக்ஸ்ட் தகவல்கள் மட்டும் மிக வேகமாக இறக்கித் தரப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி செயலியும், இன்ஸ்டாபேப்பர் அப்ளிகேஷனும் இதைத்தான் செய்கின்றன. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் செயலிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், ஓர் அப்ளிகேஷன் எப்படி இயங்க வேண்டும் என்பதனைக் கட்டுப்படுத்த கூடுதலாகப் பல வழிகளைப் பெறுகின்றனர். ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனுமதியை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அனுமதியைச் சில குறிப்பிட்ட செயலிகளுக்கு மட்டும் வழங்கலாம்; அல்லது அனுமதி மறக்கலாம். எடுத்துக் காட்டாக, பயனாளர் ஒருவர், வாட்ஸ் அப் செயலி காண்டாக்ட்ஸ் பட்டியலைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். அதே நேரத்தில், மைக்ரோபோன் செயலிக்கு அந்த அனுமதியை மறுக்கலாம். சிறிய வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கும் வசதி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பயனாளர் ஒருவர், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் உள்ள தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டால், அந்த செயலியின் சாப்ட்வேர், எந்த தொடர்புடன், எந்த அப்ளிகேஷன் வழி பயனாளர் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதனை நினைவில் கொள்ளும். இதன் மூலம், இந்த சிஸ்டத்தில், அலாரம், நோட்டிபிகேஷன், ரிங் டோன் போன்ற ஒலிக்கும் செயல்களுக்கு, தனித்தனியே ஒலி அளவினை நிர்ணயம் செய்திடலாம். தற்போதைக்கு ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் சோதனைப் பதிப்பாகக் கிடைக்கிறது. இதன் முழு இயக்கத் தொகுப்பு 2015 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்படும்.

Friday 26 June 2015

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிரபலமான ஆபீஸ் மென்பொருளை ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்துள்ளது. இனி மைக்ரோசாப்ட் வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் எக்செல் மென்பொருட்களை ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப் உலகில் மைக்ரோசாப்டின் விஸ்டோஸ் இயங்குதளம் கோலாச்சுகிறது. விண்டோஸ் பயனாளிகள் மத்தியில் மைக்ரோசாப்டின் வேர்டு, பவர்பாயிண்ட் மற்றும் எக்செல் ஆகிய மென்பொருட்கள் பிரபலமாக உள்ளன. டெஸ்க்டாப்பில் தட்டச்சு செய்யவும், கணக்குகளை கையாளவும் வேர்ட் மற்றும் எக்செல் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், காட்சி விளக்கங்களுக்கு பயன்படும் மென்பொருளாக பவர்பாயிண்ட் விளங்குகிறது. ஆனால், ஸ்மார்ட்போன் பிரியர்கள் இந்த மென்பொருட்களை பயன்படுத்த விரும்பினால், அவர்கள் விண்டோஸ் போன் பயனாளிகளாக இருக்க வேண்டும். ஏனெனில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட போன்களில் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. இனி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இந்த மென்பொருட்களை பயன்படுத்தலாம்.ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளை அறிமுகம் செய்ததன் தொடர்ச்சியாக மைக்ரோசாப்ட், இப்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதை விரிவுபடுத்தியுள்ளது. வேர்டு அல்லது எக்செல் பயன்படுத்த விரும்புகிறவர்கள், இதற்கான செயலியை கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். வர்த்தக பயன்பாடு என்றால் தனியே அனுமதி பெற வேண்டும். மேலும் ஆண்ட்ராய்டின் மேம்பட்ட வர்ஷன் போன்களில் மட்டுமே இவை செயல்படும். ஆண்ட்ராய்டில் இந்த மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளதோடு, ஏற்கனவே உள்ள கூகுள் டிரைவ் மற்றும் டிராப் பாக்ஸ் சேவைகளுடனும் இணைந்து இவற்றை பயன்படுத்தலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. DOWNLOAD LINK PLAY STORE: CLICK HERE https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.word

Tuesday 23 June 2015

Device Driver - களைப் பாதுகாக்க Double Driver!

ஒரு கணினியை வாங்கும்போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள்.
alt

டீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு வன்பொருள் சாதனமும் ஒரு டீவைஸ் ட்ரைவர் மென்பொருளைக் கொண்டிருக்கும். . அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது.

கணினியில் தேவையான அனைத்து டீவைஸ் ட்ரைவர்க்ளும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை போமட் செய்து மறுபடி இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய டீவைஸ் ட்ரைவரையும் மறுபட்டி நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் டீவைஸ் ட்ரைவர் சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம்.

ட்ரைவர் சீடி பழுதடைந்து விட்டால் அல்லது அதனைத் தொலைத்து விட்டால் எனன செய்வது? அதேபோன்று பழைய பாவித்த கணினிகளை வாங்கும்போது அனேகமாக அதற்குரிய ட்ரைவர் சிடிக்கள் கிடைப்பதில்லை.
தேவையான டீவைஸ் ட்ரைவரை இணையத்திலிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம். இணயத்திலும் இல்லாதபோது ட்ரைவர் சீடியைத் தேடி எங்கே செலவது?

கணினி வன்பொருள் சாதனங்களுக்குத் தேவையான உரிய ட்ரைவர் மென்பொருளைத் தேடிப்பெறுவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த நிலைமையை எதிர் கொண்டவர்களே அறிவார்கள்.

இது போன்ற ட்ரைவர் மென்பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது டபல் ட்ரைவர் (Double Driver) எனும் சிறிய மென்பொருள் கருவி. இந்த டபல் ட்ரைவர் மூலம் உங்கள் கனினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருள்கள் அனைத்தையும் தனியாக ஒரு சீடியிலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ பாதுகாப்பாக (Back up) சேமித்துக் கொள்லலாம் ,
டபல் ட்ரைவர் இல்குவான இடை முகப்பைக் கொண்ட ஒரு பயனுள்ள ஒரு இலவ்ச யூட்டிலிட்டி. இதன் மூலம் கணினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருளகளைப் பார்வையிடுவதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் சேமிக்கவும், சேமித்ததிலிருந்து மறுபடி ரீஸ்டோர் (restore) செய்யவும் முடிகிறது. .

டபள் ட்ரைவர் யூட்டிலிட்டி கணினியை முழுமையாகப் பரீட்சித்து ட்ரைவர் மென்பொருள்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எமக்குக் காண்பிக்கிறது. அதனை பேக்கப் செய்து விட்டு தேவையான போது பேக்கப்பிலிருந்து உரிய மென்பொருளை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம் ;.
விண்டோஸின் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது. டபல் ட்ரைவர். .exe பைலாகக் கிடைக்கும் இந்த யூட்டிலிட்டியை கணியில் நிறுவ வேண்டிய அவசியமுமில்லை,

இந்த டபல் ட்ரைவர் மென்பொருளை http://www.boozet.co.cc/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்

காம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

ஒரு சில நேரங்களில், உங்கள் கணினியில், கம்யூனிகேஷன் போர்ட் என அழைக்கப்படும், COM போர்ட்டில் கனெக்ட் செய்யப்படும் வெளி சாதனங்கள் (Extenal devices) இயங்க மறுக்கும். அப்போது அந்த சாதனத்தில் பிரச்சனையோ என நாம் யோசிக்கத்தோன்றும். ஆனால், நாம் அந்த சாதனத்தை இணைத்திருக்கும் COM போர்ட் சரியாக வேலை செய்யாமல் போனாலும், அந்த சாதனம் இயங்காமல் போயிருக்கலாம் அல்லவா? அந்த காம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

ஒரு சுலபமான வழி.

பொதுவாக கணினி, காம் போர்ட் மூலமாக, 3 வது pin வழியாக தகவல் அனுப்பும். 2 வது pin வழியாக தகவல்களைப்பெறும். இந்த இரண்டு பின்களிடையே தொடர்பு ஏற்படுத்தினால், அந்த போர்ட் வேலை செய்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதலில், சோதித்தறிய வேண்டிய காம் போர்ட்டில், ஏதாவது சாதனம் இணைக்கப்பட்டிருந்தால் அதனை நீக்குங்கள்.
பின்னர், உங்கள் கணினியில் ஹைபர்டெர்மினல் ஓபன் செய்து கொள்ளுங்கள்.






பின்னர் கனெக்ஷன் டெஸ்க்ரிப்ஷன் விண்டோவில் ஏதாவதொரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள்.






பின்னர், நீங்கள் சோதித்துப்பார்க்க வேண்டிய காம் போர்ட்டை தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள்.





போர்ட் செட்டிங்க்ஸ் விண்டோவில் எதுவும், மாற்ற வேண்டாம். OK பொத்தானை அழுத்துங்கள்.





இப்பொழுது தோன்றும் விண்டோவில், ஏதாவது டைப் செய்யுங்கள். நீங்கள் டைப் செய்யும் எந்த எழுத்தும், நமக்கு தெரியாது.

இப்பொழுது ஜெம் கிளிப் கொண்டோ, அல்லது சிறு ஒயர் கொண்டோ, காம் போர்ட்டில், இரண்டாவது, அல்லது மூன்றாவது பின்களை ஷார்ட் செய்யுங்கள் (மிகவும் பாதுகாப்புடன் கவனமாக செய்யவும்.).






இப்போது ஷார்ட் செய்தபடியே ஹைபர்டெர்மினல் விண்டோவில் டைப் செய்யுங்கள். இப்போது நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் வெளியில் தெரியும். அவ்வாறு தெரிந்தால், உங்கள் காம் போர்ட் வேலை செய்கிறது என்று பொருள். இல்லையென்றால் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை அறியலாம்.

ஆபாச இணையதள பக்கங்களை நீக்குகிறது கூகுள்!

பிரபல இணையதள தேடல் சர்வரான கூகுள், தனது தேடல் ஆர்ச்சீவ்ஸ் பட்டியலில் இருந்து ஆபாச இணையதளங்களை விரைவில் நீக்கவுள்ளது.கூகுள் இணையதளத்தில், தகவல்களைத் தேடுவோரின் அனுமதியில்லாமல் பாலியல் ஆபாசப் படங்கள் கொண்ட இணைய தளங்கள் தோன்றுவது குறித்து இணையதள வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் இது போன்று பாலியல் காட்சிகள், புகைப்படங்கள் தோன்றுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென கூகுள் பக்கத்தின் விளிம்பு பகுதியில்,பிரத்யேக புகார் பக்கம் திறக்கப்படும். அதில், ஆபாசப் படங்கள் குறித்து புகார் செய்யலாம்.இதன் பிறகு அந்த படங்கள் நீக்கப்பட்டுவிடும். இதன் மூலம் ஆபாச தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படும்.


இது தொடர்பாக கூகுள் தனது வலைப் பக்கத்தில், " தனிப்பட்ட நபர்களின் மீது தாக்குதல் நடத்தி, அவர்களுக்கு மன ரீதியாக சிதைவுகளைத் தரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்கள் உறுதியாக நீக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன " என்று குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிள்( iOS9)நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ஆண்டுதோறும் தன் கட்டமைப்பில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது, பெரிய அளவில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் கருத்தரங்கினை இரு வாரங்களுக்கு முன்னர் சான்பிரான்சிஸ்கோவில் நடத்தியது. அப்போது தன் புதிய செயலிகளையும், அவற்றிற்கான கட்டமைப்பினையும், அவை வழங்கக் கூடிய நவீன வசதிகளையும் வெளிப்படுத்தியது. ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஐ.ஓ.எஸ்.9, மேக் கம்ப்யூட்டர்களுக்கான ஓ.எஸ். எக்ஸ் அப்டேட் கேபிதான் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஓ.எஸ். 2 ஆகியவை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.



ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஐ.ஓ.எஸ். 9(iOS 9): 


இந்தக் கருத்தரங்கில் மிகப் பெரிய வெளிப்பாடாகக் கருதப்பட்டது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கான அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இது iOS9 என அழைக்கப்படுகிறது. இதில் புதியதாகப் பல அம்சங்கள் தரப்பட்டுள்ளன. அவை


சிரி (Siri) செயலியில் முன்னேற்றம்:


'சிரி' என்பது ஆப்பிள் ஐபோன் 4எஸ் மற்றும் புதியதாக வந்துள்ள ஐபேட் மற்றும் ஐபாட் ஆகிய சாதனங்களில் ஒருங்கிணைந்து செயலாற்றும் ஓர் “அறிவுபூர்வமான உதவியாளன்” எனக் கூறலாம். நாம் நம் ஒலி வழிக் கட்டளைகளை வழங்கி இந்த மொபைல் சாதனங்களையும் அதன் செயலிகளையும் இயக்கலாம். இதற்கு அடிப்படையில் அமைந்திருப்பது 'சிரி' செயலியாகும். பல புதிய உத்திகளும் வசதிகளும் இதற்கென ஐ.ஓ.எஸ்.9ல் தரப்பட்டுள்ளன. தர்ட் பார்ட்டி சப்போர்ட் கொண்டு தேடுதல் பணியும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி “கூகுள் நவ்” மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய “கார்டனா” சாதனத்திற்கு போட்டியாக இயங்கும்.



 (Caller Id): 

உங்களுடைய ஐபோன் இனி உங்கள் மின் அஞ்சல் தொடர்புகளை ஆய்வு செய்து, தொலைபேசியில் அழைப்பது யார் எனக் காட்டும். திரையிலேயே இது யாரிடமிருந்து வந்திருக்கலாம் என அறிவிக்கும். 



ஆப்பிள் 'பே':


 நாம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கியவுடன், அது குறித்த தகவல்கள் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதற்கு பரிசாக ஏதேனும் 'reward card' வழங்கப்பட்டால் அவை நம் போனில் பாதுகாக்கப்படும். இந்த வகையில் இந்த தள்ளுபடி மற்றும் பரிசு தகவல்கள் சேகரிக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்குத் தயாராய் வைக்கப்படும். பின்னர், சரியான விற்பனை மையத்தில் பயன்படுத்தக் கூடிய இந்த பரிசுக் கூப்பன்களை வெளிப்படுத்தி, அவற்றைக் காசாக்க உதவும்.



வாலட் (Wallet):


இந்த வசதிக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.



கீ போர்ட்:

தன் சாப்ட்வேர் கீ போர்டினை, ஆப்பிள், ஐ.ஓ.எஸ்.9ல் விரிவுபடுத்தியுள்ளது. இதனை QuickType என அழைக்கிறது. ஒரு டூல் பார் மூலம் Cut, copy and paste செயல்பாடுகள் தரப்படுகின்றன. 



மேப் மேம்பாடு:

ஆப்பிள் தரும் மேப் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. "Transit," என்ற பெயரில் இனி, சிறிய அளவிலான வழிகள் மற்றும் பொது பயணிகள் வாகனங்கள் குறித்த தகவல்கள் காட்டப்படும். மேப்களிலேயே, ட்ரெயின் மற்றும் பஸ் பயணங்கள் குறித்த தகவல்கள் இணைக்கப்படும் எங்கு எப்போது நடந்து செல்லலாம் என்றும், குறுக்காகச் செல்லும் பாதைகளையும் இனி மேப் வழி காட்டும். Restaurants, Groceries, Bakeries என்ற வகைகளிலும் தேடலை மேற்கொள்ளலாம். 


செய்திகள் (News): 


இது ஒரு புதிய செயலி. தனிப்பட்ட முறையில் செய்திகள் தொகுக்கப்பட்டு கிடைக்கும். தற்போதைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளிலிருந்து வெளியாகும் இதழ்களுடன் இதற்கென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனி மற்ற நாடுகளில் பிரசுரிக்கப்படும் செய்தித் தாள்களும் ஒருங்கிணைக்கப்படும். இவற்றிலிருந்து ஐ போன் பயனாளரின் தேடுதல் மற்றும் விருப்பங்களுக்கேற்ப தகவல்கள் தரப்படும்.



நோட்ஸ் (Notes):

இந்த புதிய சிஸ்டத்தில், நோட்ஸ், ஏறத்தாழ நோட்பேட் அளவிற்கு புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. புதிய டூல் பார் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டோ இணைப்பு, டெக்ஸ்ட் பார்மட்டிங், புல்லட் வரிசை ஆகியவற்றை உருவாக்கலாம். நாமே வரையும் படங்களை, குறிப்புடன் இணைக்கலாம். 



செயல்பாடும் பேட்டரியும் (performance and battery): 


புதிய மொபைல் செயலியான ஐ.ஓ.எஸ். 9, இதுவரை செயல்பட்ட இயக்க முறைமைத் தொகுப்புகளைக் காட்டிலும் 40% கூடுதலான வேகத்தில் செயல்படும். பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கும் திறனும் அளிக்கப்பட்டுள்ளது. 



ஐபேட்: 

புதிய ஐ.ஓ.எஸ்.9 செயலியில், ஐபேட் சாதனங்கள் சிறப்பு கவனத்துடன் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் கீ போர்ட் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளும் வசதி கூடுதல் அமைப்பினைப் பெறுகிறது. "slide-over" என்ற பெயரில், திரை பிரிக்கப்பட்டு, வேறுபட்ட செயல்பாடுகளை இவற்றில் மேற்கொள்ளலாம். இரண்டு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்கலாம்.

ஒரே நேரத்தில் இரு பணிகளைத் தருவதில் இன்னொரு வகையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இது படங்களைச் சார்ந்ததாகும். ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னொன்றை இயக்கினால், ஏற்கனவே பார்த்துக் கொண்டிருப்பது சிறிய கட்டத்தில் காட்டப்பட்டு, புதிய படம் பெரியதாகக் காட்டப்படும். பின்னர், இந்த இரண்டினையும் கட்டம் மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே ஐ.ஓ.எஸ். 8 இயங்கிய அனைத்து சாதனங்களிலும், ஐ.ஓ.எஸ். 9 இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது ஐ.ஓ.எஸ். 9, செயலிகளை உருவாக்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் பொதுமக்களுக்கான சோதனைத் தொகுப்பு வழங்கப்படும். பின்னர், இது ஐபோன் 4 எஸ் மற்றும் ஐபேட் 2 சாதனங்கள் தொடங்கி, அதன் பின்னர் அறிமுகமான சாதனங்களுக்கு இலவசமாகத் தரப்படும்.


பொதுவாக மொபைல் போன்களுக்கென செயலிகளை உருவாக்குபவர்கள், ஆப்பிள் சாதனங்களுக்குத்தான் முதலில் உருவாக்குவார்கள். பின்னரே, ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்குச் செல்வார்கள். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் தான் அதிக பணம் வழங்குகிறது. (அண்மைக் காலத்தில் தான், இந்த வருமானம் தருவதில், ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பெற்றது) 

மேலும், ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில், அதில் ஒரே வகைதான் இருக்கும். தங்கள் அப்ளிகேஷன்களைச் சோதனை செய்து பார்ப்பது எளிது. ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல வகைகள் உள்ளன. எனவே, அவை அனைத்திலும் சோதனை செய்து பார்ப்பது சற்று அதிக காலம் எடுக்கும் செயலாகும்.

இந்த ஆண்டு பயனாளர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சென்ற முறை, ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தேவையான காலி இடம் 4.6 ஜி.பி. ஆக இருந்தது. இம்முறை, ஐ.ஓ.எஸ்.9க்கு, காலி இடம் 1.8 ஜி.பி. போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேக் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓ.எஸ்.எக்ஸ் 10.11 (El Capitan)ல் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ட்ரேக் பேடில், கர்சர் இருக்கும் இடத்தை, விரல் அசைவில் தெரிந்து கொள்ளலாம். சபாரி பிரவுசர், ஸ்பாட் லைட் தேடல் ஆகியவையும் மேம்பாடடைந்துள்ளன. 

ஆப்பிள் நிறுவனத்தின் கேம் அப்ளிகேஷன் மெட்டல் (Metal) பல புதிய பரிணாமங்களைப் பெறுகிறது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தினைச் செயல்படுத்துவதில், 50% கூடுதலான வேகத்தில் இது இயங்கும். கேம்ஸ் உருவாக்கும் பல நிறுவனங்கள் ஏற்கனவே இந்த கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில், தங்கள் படைப்புகளை உருவாக்கி வருகின்றன.

இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சிஸ்டம் இணைந்து மேம்படுத்தப்படுகிறது. WatchOS 2 வெளியிடப்படுகிறது. கடிகாரத்தின் முகப்பு பக்கத்தில் போட்டோக்கள், போட்டோ ஆல்பம் ஆகியவற்றை இனி இணைக்கலாம். செயலிகள் அனைத்தும் வேகமாக, கூடுதல் சிறப்புடன் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படுகின்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாலட் மற்றும் மேப் ட்ரான்ஸிட் செயல்பாடுகள், ஆப்பிள் வாட்ச் சாதனங்களிலும் இயங்கும். இவற்றை வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தலாம். 
இது போல, ஆப்பிள் சாதனங்கள் அனைத்திலும் பல புதிய நவீன வசதிகளும், மேம்படுத்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.