Monday 25 May 2015

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில் சீனாவில் நடைபெற்ற WinHEC தொழில் நுட்ப கருத்தரங்கில், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமை குறித்து கருத்து தெரிவிக்கையில், தன்னுடைய விண்டோஸ் 7, விண்டோஸ் போன் 8.1, விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோர் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த கிடைக்கும் என அறிவித்தது. அப்போது, மேற்காணும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின், திருட்டு நகலைப் பதிந்து பயன்படுத்தியவர்களும், இலவசமாக புதிய சிஸ்டத்தினைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

Q7ERZHC.png?2


ராய்ட்டர்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களிடமும் இது தெரிவிக்கப்பட்டது (http://recode.net/2015/03/18/microsoft-tackles-china-piracy-with-free-upgrade-to-windows-10/). அதனாலேயே, விண்டோஸ் நூறு கோடி சாதனங்களில் இயக்கப்படும்  ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பெருமையைச் சில ஆண்டுகளில் பெறும் என்றும் கூறியிருந்தது. ஆனால், இப்போது, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மேம்படுத்திக் கொள்வது, திருட்டு நகல் பயன்படுத்துபவருக்கு இலவசம் அல்ல என்று மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவின் தலைவர் டெர்ரி மையர்சன் தன் வலைமனைக் குறிப்பில் (http://blogs.windows.com/bloggingwindows/2015/05/15/genuine-windows-and-windows-10/) கூறியுள்ளார்.


அதற்குப் பதிலாக, அவ்வாறு தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோரின் சாதனங்களை “முறையானவை அல்லாத நிலையிலேயே (a Non-Genuine state)” மைக்ரோசாப்ட் வைத்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை இரு பொருள் தரும் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம். திருட்டு நகல் பயன்படுத்தி வருபவர்கள், விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொண்டாலும், அவை திருட்டு நகல் எனவே காட்டப்படும். அதற்கான நினைவூட்டல்கள் தொடர்ந்து அனுப்பப்படும். இதனை ஆங்கிலத்தில் nagware என அழைப்பார்கள். அதாவது, “ஏய்! உன்னிடம் உள்ளது திருட்டு நகல்” என நச் நச் என்று சொல்லிக் கொண்டே இருக்கும். திருட்டு நகல் என்ற வாட்டர்மார்க் ஒன்று தொடர்ந்து காட்டப்படும். அப்கிரேட் இலவசமாக அனுமதிக்கப்படும்; ஆனால், அது நியாயமானது அல்ல என்று காட்டப்படும்.


மேலும், அதிகாரபூர்வமற்ற சிஸ்டம் வைத்திருப்பவர்களின் கம்ப்யூட்டர்களில் மால்வேர் பரவும் அபாயம், தனிநபர் தகவல்கள் திருடப்படுதல், ஏமாற்று வேலைகளுக்குள்ளாதல் ஆகியவை எளிதாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திருட்டு நகலினை ஏற்கனவே வைத்திருப்பவர்களுக்கு, அவர்களைக் கவரும் வகையில், பல புதிய வசதிகள் இருப்பதைக் காட்டுவோம் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பாக சீனாவில், தாங்கள் தரும் கம்ப்யூட்டர்களில், அதிகாரபூர்வ அனுமதி பெற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இருப்பது போன்ற மாயைத் தோற்றத்தைத் தருகின்றன. எனவே, தாங்கள் தவறு செய்கிறோம் என்பதை அறியாத வாடிக்கையாளர்களே அதிகம். அவர்கள் நிச்சயமாய், கட்டணம் செலுத்திப் புதிய இயக்க முறைமையை வாங்குவார்கள் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


அது போன்ற சிஸ்டங்கள் வைத்திருப்பவர்கள், போலியான சிஸ்டம் எனக் காட்டப்படும் வாட்டர்மார்க் அடையாளத்தைக் காட்டி, அந்த கம்ப்யூட்டரை, வாங்கிய நிறுவனத்திடமே திரும்பக் கொடுக்கலாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்னொரு வழியில் பார்த்தால், திருட்டு நகல் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து மேம்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள், சரியான விண்டோஸ் 10 பதிப்பு வேண்டும் எனில், கட்டணம் செலுத்தி மட்டுமே பெற அனுமதிக்கப்படுவார்கள், எது எப்படி இருந்தாலும், மைக்ரோசாப்ட் முன்பு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற்றது, அதன் வாடிக்கையாளர்களுக்கு சற்று நெருடலாகவே தான் உள்ளது.



அதே நேரத்தில், திருட்டு நகல் பயன்படுத்துபவர்கள், எதனையும் இலவசமாகப் பெற எண்ணுவதும் தவறே.

Wednesday 13 May 2015

பெருகிவரும் இந்திய இணையம் குறித்து அமெரிக்க அரசு கவலை



ந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து வருவதன் மூலம், இணையத்தை அணுகித் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இது குறித்து, அனைத்து நாடுகளும் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஒரே ஒரு நாடு மட்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அது அமெரிக்க அரசு தான். மிக அதிக எண்ணிக்கையில் பயனாளர்கள் இந்தியாவில் பெருகி வருவதனால், ஆன் லைன் தகவல் திருட்டும் அதிகமாகும் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள், அண்மையில் அளித்துள்ள அறிக்கையில் (Special 301 Report for 2015) இந்தக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
emTWt3O.jpg?1இந்த ஆண்டு ஜூன் முடிவிற்குள்ளாக, மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில், 21 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆறு மாதங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வளர்ச்சி 23% ஆக உள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டின் இறுதியில், 37 கோடியாக உயர்ந்து, உலகில் இரண்டாவது நாடாக அமையும் என்று தெரிகிறது.  இந்த அபரிதமான வளர்ச்சியை எதிர்பார்த்து, இந்திய அரசு, தன் சட்டதிட்டத்தில், இணையத் தகவல் திருட்டைத் தடுப்பதற்குண்டான, பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும், சட்டப் பிரிவுகளை ஏற்படுத்தி, அவற்றை அமல்படுத்தும் வழிகளையும், அமெரிக்க அரசு, இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது. 

இணையத்தில் தகவல் திருட்டுகளைக் கண்டறியும் எக்ஸிபியோ (Excipio) என்னும் நிறுவனம், அண்மையில், கட்டணம் செலுத்தி மட்டுமே பார்க்கக் கூடிய சில திரைப்படங்களை, அதிக அளவில் திருட்டுத் தனமாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்ததில், இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளது. வின் டீசல், என்னும் நடிகர் நடித்த ப்யூரியஸ் 7 (Furious 7) என்னும் திரைப்படத்தினை, சட்டத்திற்குப் புறம்பாக, சென்ற ஏப்ரல் வரை, இந்தியாவில் 5 லட்சத்து 78 ஆயிரம் பேர் தரவிறக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உள்ளன.


இது போன்ற திருட்டுத்தனமான தரவிறக்கச் செயல்களுக்குத் துணை போகும் Extratorrent.cc என்னும் இணைய தளம், இந்தியாவில் மிகவும் பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளன. பலரும் இதனைப் பயன்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, இந்த இணைய தளம் உக்ரைன் நாட்டில் உள்ள சர்வரில் இயங்குகிறது. இந்த தளத்தில், 14 லட்சம் திருட்டு பைல்கள், திருடப்படுவதற்கென்றே உள்ளன. ஒவ்வொரு மாதமும், ஆயிரம் கோடி பேர் இதிலிருந்து பைல்களைத் திருட்டுத்தனமாகப் பைல்களைத் தரவிறக்கம் செய்கின்றனர். இது போன்ற இணையத் திருட்டுக்களை ஒடுக்க மிகக் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இணையப் பயனாளர்கள் உயர்ந்து வரும் பொழுது, மோசமான விளைவுகள் ஏற்படாமல் இருக்கும். இதனையே அமெரிக்க அரசு விரும்புகிறது.

Monday 4 May 2015

ஆண்ட்ராய்ட் கிட்காட் 4.4

ஆண்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன்களின் இயக்கப் பயன்படும் இயங்குதளம். இது கூகிள் நிறுவனத்தாரின் தயாரிப்பு ஆகும்.
ஆண்ட்ராய்ட் பல்வேறு காலகட்டடங்களில் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக கிடைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு புதிய பதிப்பிலும் முந்தைய பதிப்பில் உள்ள குறைகளை களைந்து மேலதிக வசதிகளைப் பெற்றிருக்கும்.
அந்த வகையில் புதிய ஆண்ட்ராய்ட் 4.4 கிட்-காட் இயங்குதளம் தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
android-4.4-kit-kat-for-all-smartphones-supports-up-to-512-MB
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் சிறப்பு:

ஆண்ட்ராய்ட் 4.4. கிட்காட் பதிப்பின் முக்கியமான சிறப்பம்சமே மிகக் குறைந்தளவு ரேம் (512 RAM) வசதி உள்ள ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்த முடியும் என்பதே.
இதற்கு முன்பு வெளியான ஆண்ட்ராய்ட் பதிப்புகளைப் பொறுத்தவரை, பயன்படுத்ததும் போன் புதியதாகவும், அதிக மெமரி வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இப்புதிய ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பில் அவ்வாறில்லை. அதனால் இப்புதிய பதிப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மிக குறைந்தளவு மெமரி கொண்ட போன்களிலும், சமீபத்தில் வெளியாகி பயனர்களை கவர்ந்த ஸ்மார்ட் வாட்ச், கூகிள் ஸ்மார்ட் கிளாஸ்  போன்ற உபகரணங்களிலும் இப்பதிப்பைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்கள்.

ஆண்ட்ராய்ட் 4.4. கிட்காட் – சிறப்பம்சங்கள்: 

  • ஓ.கே கூகிள் (OK Google): இந்த வசதியின் மூலம் Google Voice Application -ஐ இயக்கமுடியும். OK Google என்று சொன்னாலே போதும் இந்த அப்ளிகேஷன் செயல்பாட்டிற்கு கிடைக்கும். மொபைலை தொடவேண்டிய அவசியமே இல்லை.
  • ஸ்மார்ட் காலர் ஐடி (Smarter Caller ID): ஸ்மார்ட் போனில் உள்ள கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நம்பரிலிருந்து போன் அழைப்பு ஏதாவது வந்தால், ஏற்கனவே அந்த எண் கூகிள் மேப்பில் இருப்பின் அதைப்பற்றிய விபரங்களை காட்டும்.
  • ஹேங்அவுட் அப்ளிகேஷன் (Hangout app): இந்த வசதியின் மூலம் ஏற்கனவே கூகிள் ஹேங் அவுட், கூகிள் டாக் மூலம் உங்களுக்கு நண்பர்கள் அனுப்பிய அரட்டை கச்சேரி SMS, MMSகளை ஆகியவற்றைப் பார்க்க முடியும்.
  • வீடியோ ரெகார்டர் (Video Recorder): இந்த வசதியின் மூலம், மொபைல் ஸ்கிரீனை ரெக்கார்ட் செய்ய முடியும். மொபைலில் நாம் மேற்கொள்ளும் செயல்களை அப்படியே வீடியோவாக பதிவுசெய்துகொள்ள முடியும். அதாவது கணினியில் Screen Recording செய்வது போல…
  • உணர்வுவெளிப்படங்கள் (Emoticons): கோபம், சிரிப்பு, துயரம் என  நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தப் பல்வேறு வகையான படங்களைப் பயன்படுத்தும் வசதி இது.
  • மிக குறைந்த ரேம் (512 MB RAM): மேலே சொன்னபடி மிக குறைந்த ரேம் வசதியில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மாடல் ஸ்மார்ட்போனிலும் இதைப்பயன்படுத்த முடியும். இப்புதிய பதிப்பில் ஆண்ட்ராய்ட் பின்னணியில் இயங்கும் பல்வேறு சேவைகளை நீக்கியிருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
உங்களது மொபைல்களில் ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பைப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யயவும்.
இந்த லிஸ்டில் இல்லாத மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்ட் பதிப்பை பெற முடியும். அதற்கு அந்த மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் 4.4. பயன்படுத்துவதைப் பற்றி அறிவிக்கும் வரை  இப்பதிப்பை பயன்படுத்த முடியாது. பொதுவாகவே மொபைல் தயாரிப்பு  நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட புதிய மாடல் ஸ்மார்ட் போன்களுக்ககு மட்டுமே ஆண்ட்ராய்ட் 4.4. பயன்படுத்தும் வசதியை அளிக்கும்.
சமீபத்தில் வெளியான கூகிள் நெக்சஸ் 5 மொபைல், Google Nexus 4, Google Nexus 7, HTC One, Samsung Galaxy S4 போன்ற புதிய கிட்காட்டிற்கு முந்திய ஆண்ட்ராய்ட் பதிப்பை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட்களுக்கு இப்புதிய பதிப்பை பயன்படுத்த முடியும். அதற்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும்.
இப்புதிய ஆண்ட்ராய்ட் பதிப்பைப் பற்றி கூகிள் சீனியர் வைஸ் பிரசிடென்ட் சுந்தர் பிச்சை கூறியதாவது: “Now you have one version of the operating system which will run across all versions of Android smartphones. Google’s Android software kit-kat runs on 80 percent of the world’s smartphones “.

ஆபரேட்டிங் சிஸ்டத்துல இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

கணினி பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருப்பது அதில் உள்ள அப்ளிகேஷன்களைப் பற்றிதான். உதராணமாக போட்டோஷாப், எம்.எஸ். ஆபிஸ், கோரல்டிரா, மீடியா பிளேயர் என்பன போன்ற மென்பொருள்களை மட்டுமே முக்கியமாக அறிந்து வைத்துள்ளார்கள்.அவைகளை இயக்கச் செய்து, முறைமைப்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பற்றி மிகப் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. அதைப்பற்றி எளிய தமிழில் அறிந்துகொள்வோம்.
அடிப்படையில் ஒரு கணினி இயங்குவதற்கு தேவையானது ஓ.எஸ் என்று சொல்லப்படக்கூடிய ஆபரேட்டிங் சிஸ்டம்தான்.
works-of-operating-systems
இதில் கணினியை இயங்க வைக்கிறது. அதில் உள்ள அப்ளிகேஷன்கள் செயல்படவும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
உதாரணமாக சொல்தென்றால் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் உள்ள சக்கரங்களைப் போன்றது. என்னதான் வாகனத்தினுள் அனைத்து பாகங்களும் இணைக்கப்பட்டாலும், சக்கரம் இல்லாமல் வாகனம் ஒரு அடி கூட நகர முடியாது.
அதுபோல தான் இந்த இயங்குதளம் என்கிற Operating System.

ஆபரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது?

இயங்குதளத்தை ஒரு அற்புதமான நிர்வாகி என்று சொல்லலாம். கணினியில் மேற்கொள்ளப்படும் பணிகளை அற்புதமாக நிர்வகிக்கிறது இது. கணினியில் உள்ள Hardware partsகளை நிர்வகிப்பது இந்த இயங்குதளமே. Monitor, Keyboard, Printer போன்ற ஹார்ட்வேர்களை நிர்வகித்து பணிகளை வாங்குவதும் இதன் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. உதாரணமாக கணினியில் நாம் கொடுக்கும் இன்புட்களை கவனித்து, அந்த இன்புட்களுக்கான அவுட்புட் என்ன என்பதை திரையில் காட்டும் செயல்களை செய்கிறது. இது பல்வேறு பணிகளை நிர்வகிக்கிறது என்றாலும் இவற்றை முதன்மையான நிர்வாகப் பணிகள் எனலாம்.
1. நினைவக மேலாணமை
2. பணி மேலாண்மை
3. கோப்பு மேலாண்மை
4. உள்ளீடு மற்றும் வெளியீடு மேலாண்மை

ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புத்திசாலித்தனம்:

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்துகொண்டு, அதற்கேற்றார்போல அதைப் பயன்படுத்திக்கொள்ளும். குறிப்பாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் நினைவகத்தில் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் மென்பொருகள் இருப்பதற்கான இடம், தட்டச்சிடுகிற விவரங்கள் இருக்கும் இடம், Disk-ல் கோப்புகளைப் படிக்கும்போது அதனுடைய விபரங்களை வைக்க வேண்டிய இடம் ஆகியவற்றை இதுவே தீர்மானிக்கிறது.

மல்டி டாஸ்க் – Multi Task

தற்பொழுது உபயோகத்தில் உள்ள அனைத்து ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த மல்டி டாஸ்க் அமைப்பு உள்ளது. மல்டி டாஸ்க் அமைப்பு என்பது கணினியில் ஒரே நேரத்தில் பல்வேறு அப்ளிகேஷன்களைத் திறந்து பணிபுரிவதாகும். உதராணமாக எம்எஸ் வேர்ட், போட்டோஷாப், எக்செல், இணைய உலவுவதல் போன்ற பல்வேறு புரோகிராம்களைத் திறந்து அதில் பணிபுரிவதைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு பல்வேறு புரோகிராம்கள் செயல்பாட்டில் இருக்கும்போது அவை ஒன்றுக்கு ஒன்று பிரச்னையில்லாமல், சீராக இயங்குவதற்கு வழிவகை செய்கிறது ஆபரேட்டிங் சிஸ்டம்.. அதாவது வாய்க்காலில் ஓடும் நீரை , நான்கைந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சரியான பாதைக்கு மடை திருப்புவதைப் போல என்று கூறலாம். வாய்க்கால் எங்கும் நீரை இடையில் உடைப்பு எடுக்காமல் பார்த்துக்கொள்வதைப் போல… இந்த புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்ளாமல் தன்னுடைய பாதையில் செயல்படும்படிச் செய்வது இந்த ஆபரேட்டிங் சிஸ்டமே..!

கோப்பு நிர்வாகம்: (File Management )

நீங்கள் உங்கள் கணினியில் உருவாக்கும் கோப்புகள், மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கான கோப்புகள், அவற்றிற்கான கோப்புறைகள் போன்றவற்றையும் இயங்குதளமே பராமரிக்கிறது. நீங்கள் கோப்புகளின் மீது செயல்படுத்தும் அனைத்து வேலைகளுமே ஆபரேட்டிங் சிஸ்டத்தால் நடத்தப்படுபவைதான். 
உதாரணமாக ஒரு கோப்பை அழிக்கிறீர்கள் என்றால் அதை சரியான அழிப்புச் செயலாக மாற்றுவது ஆபரேட்டிங் சிஸ்டம்தான். 
நீங்கள் கொடுக்கும் கட்டளைகளைப் புரிந்துகொண்டு, Delete கொடுத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கோப்பை அளிக்க வேண்டும் எனப்புரிந்துகொண்டு அந்த செயலைச் செய்கிறது. 
அதுபோல நீங்கள் கோப்புகளை நகர்த்துதல், கோப்புகளை ஓரு கோப்புறையிலிருந்து மற்றொரு கோப்புக்கு கொண்டுசெல்லுதல், காப்பி செய்தல் , அந்த கோப்புகளுக்கு பெயர்மாற்றம் செய்தல் போன்ற செயல்களையும் செய்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே.
ஒரு குறிப்பிட்ட பணியை இரண்டு பகுதிகளாப் பிரித்து இரு cpu க்களிடம் கொடுத்து அந்த வேலையை முடிக்கச் செய்யும் ஆற்றலையும் பெற்றுள்ளது operating system.
கோப்புகளை உருவாக்கி அதைச் சேமிக்கும்பொழுது அது சேமிக்கப்படும் நேரம், தேதி, கிழமை ஆகியவற்றை குறிப்பதும், கோப்புகளை மறைக்க, கோப்புகளை படிக்க என்கிற Hidden, Readonly பண்புகளை கொடுக்கும்பொழுது அவற்றை மேற்கொள்வதும், 
ஒரு குறிப்பிட்ட கோப்பின் பெயரை அதே வகையான கோப்பிற்கு பெயரை அதே பெயரைக் கொடுக்கும்பொழுது ஏற்றுக்கொள்ளமல் செய்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகள்தான்.
ஆக, கணினியில் நீங்கள் எந்த ஒரு பணியை மேற்கொள்ளும்பொழுது, அதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்வதும், வகுத்துக் கொடுப்பதும் கண்ணுக்குத் தெரியாத இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான். 
அதனால்தான் இதனை இயங்குதளம் என்கிறோம். இதன் மீதுதான் மற்ற அனைத்தை அப்ளிகேஷன்களும் இயங்குகின்றன. கணினிக்குத் தேவையான ஒரு அடிப்படை மென்பொருள், இயக்க மென்பொருள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் அது மிகையாது. அவனின்றி அணுவும் அசையாது என்பது போல, ஆபரேட்டிங் சிஸ்டம் இன்றி கணினியும் அசையாது..

ஸ்மார்ட்போன்களில் Sensor Technology

Sensor Technology என்றால் என்ன? 

இன்று Smartphone களில் இத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. Sensor Technology என்பதை  தமிழில் “உணர்வலை” தொழில்நுட்பம் எனலாம். ஏதாவது ஒரு புற காரணியின் மூலம் தூண்டுதலைப் பெற்று, அந்த தூண்டலுக்கேற்ப செயல்படும் நுட்பம் சென்சார் தொழில்நுட்பமாகும். 

சென்சார் தொழில்நுட்பத்தின் செயல்பாடு: 

சென்சார் தொழில்நுட்பமானது ஒரு தூண்டுலைப் பெற்று அதற்கேற்ற வகையில் இயங்கும். அந்த தூண்டுதலானது வெப்பமாக (heat) இருக்கலாம். ஒளியாக (Light) இருக்கலாம். ஏன் அது ஒரு ரேடியோ அலையாக (Radio) கூட இருக்கலாம். 
smartphone sensors
இவற்றில் எந்த ஒரு காரணியும் ஒரு தூண்டுதலை (Temptation) ஏற்படுத்தலாம். அதுபோன்ற தூண்டுதலுக்கேற்ற செயல்பாட்டை ஸ்மார்ட்போன்களில் பயனபடுத்துகின்றனர். விரல்கள் இலேசாக திரையில் தெரியும் குறிப்பிட்ட அப்ளிகேஷன் அமைந்திருக்கும் படத்தை தொடும்பொழுது அந்த அப்ளிகேஷனுக்கான தூண்டல் சமிக்சைகள் உருவாகி, தொட்ட அப்ளிகேஷனை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிடும். 
சென்சார் தொழில்நுட்பமானது பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சிப்பெற்று வருகிறது. 

Ambient Light Sensor- ஒளி உணர்வலை: 

தற்போதுள்ள Smart Devices களான டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதுபோன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படும் Battery Life ம் அதிகமாகிறது. 
Ambient light sensor நுட்பமானது Display யை சரி செய்து, நாம் தெளிவாக காட்சி அமைப்பைக் கொடுக்கிறது. அதிக ஒளியுடன் Display இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

Proximity sensor – அருகமைவு உணர்வலை 

இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் தொடுதிரை தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளது. உங்களுக்கு வரும் போன் கால்களை நீங்கள் Attend செய்து பேசும்பொழுது, தொடுதிரை நுட்பத்தை செயல்படாமல் தடுக்கும் நுட்பத்திற்கு Proximity Sensor ஆகும். உங்களுக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசுவதற்கு காதருகே ஸ்மார்ட்போனை கொண்டு செல்லும்பொழுது தானாகவே Touch Screen Lock ஆகிவிடும். அதனால் எந்த ஒரு அப்ளிகேஷனும் காதில் பட்டு திறக்காது.  பேசி முடித்த பிறகு, காதிலிருந்து ஸ்மார்ட்போனை விலக்கும்போது  தானாகவே மீண்டும் Touch Screen பயன்பாட்டுக்கு வந்துவிடும். 

GPS – Global Positioning System- புவி இட நிறுத்தல் 

இந்த தொழில் நுட்பம், Military operations களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.  சில வருடங்களுக்கு முன்பே பொதுமக்களுக்கும் GPS Technology பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.  
நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் Graph கண்டறிந்து, Smartphone Display – ல் காட்டுகிறது. இப்பயன்பாட்டின் மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். GPS என்று சொல்லப்படும் Global Positioning System நுட்பத்திற்கான செயற்கைகோள்கள் பூமியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அசிஸ்ட்டட் ஜிபிஎஸ் – Assisted GPS 

Assisted GPS என்ற புதிய தொழில் நுட்பமும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. Mobile Network கள் நேரடியாக Satelitesகளை தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பமானது, அதற்கான சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது. 
iPhone 3G, 3GS, iPhone4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. iPhone 4 S, GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.

Accelerometer- அக்ஸிலரோமீட்டர் 

ஸ்மார்ட் போனில் இயங்கும் Accelerometer நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி Portrait நிலையிலிருந்து Landscape நிலைக்கு மாற்றப்படுகிறது. 
இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், gyroscopic Sensor என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

Compass -காம்பஸ் 

காம்பஸ் என்பது புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட்போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் (Magnetic waves) போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது. 

Other Sensor Technology: மற்ற சென்சார் நுட்பங்கள்

மேலும் gyroscope, BSI போன் சென்சார் தொழில்நுட்பங்களும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில் Low power, திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுபவை. 
Sensor Technology தொடர்ச்சியாக பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சியுற்று வருகிறது. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பமானது மேலும் ஆச்சர்யமிக்க புதிய செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை

இன்வெர்டர் பராமரிப்பு செய்வது எப்படி?

மின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள், அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையுண்டு. 
அதிக விலை  கொடுத்து வாங்கப்பட்ட இன்வர்ட்டர் (Costly Power Inverter) தரமானதாக இருக்கும். குறைந்த விலையில் வாங்கப்பட்ட இன்வர்ட்டர் தரம் குறைந்து காணப்படும். அல்லது அதில் மின்சாரம் தேக்கிவைக்கும் அளவு (Inverter Storage Capacity) குறைவானதாக இருக்கும். நல்ல தரமிக்க விலையுயர்ந்த இன்வர்ட்டர்களை வாங்குவது சிறந்தது.
இன்வர்ட்டர் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி, கணினி போன்ற முக்கியமான விலை உயர்ந்த சாதனங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றனர். இன்வர்ட்டர் சரியான மின்சாரத்தை சீராக கொடுக்கும்பொழுது இதுபோன்ற சாதனங்கள் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவேதான் இன்வர்ட்டர் பராமரிப்பு மிக மிக அவசியமாகிறது. 
இன்வர்ட்டர்களை எப்படி பராமரிப்பது? எப்படி பாதுகாப்பது என்பது குறித்த விளக்கங்கள் கீழே… 
inverter-care-tips-and-tricks
  • Inverter வைக்கும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டும் வகையில் தரையில் வைக்க கூடாது. முடிந்தளவு இன்வர்ட்டரை உயரமான செல்ப் மீது வைப்பது நல்லது.  
  • இன்வர்ட்டரை கீழே வைக்கும் நிலை இருந்தால் இன்வர்ட் இருக்கும் இடத்தில் தண்ணீர் போன்ற ஈரம் படாமல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். குழுந்தைகள் செல்லாத இடமாக இருக்க வேண்டும்.
  • இன்வர்டர் சார்ஜ் (Power Inverter charging)ஆகிக்கொண்டிருக்கும்போது, மின் இணைப்பை துண்டிக்க கூடாது. 
  • சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது பேட்டரியை (Battery Removal) கழற்றுவதும் தவறான செயல். 
  • மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கிடைத்தாலும், மாதத்தில் ஒரு நாளாவது முழுமையாக இன்வர்ட்டர் மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் இன்வர்ட்டரின் செயல்படும் திறன் (Inverter act) குறையாமல் இருக்கும். 
  • இன்வர்ட்டர் பேட்டரியின் டிஸ்டில்ட் வாட்டர் (Battery distilled Water) குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறையும்போது அதை நிரப்பி வைக்க மறக்க கூடாது. 
  • இன்வர்டர் பேட்டரிகளில் இரு வகை உண்டு. 1. Tubular battery. 2. Flat Battery. இதில் சிறந்ததாக கருதப்படுவது டியூப்ளர் பேட்டரி. நீண்ட நாட்கள் உழைக்க கூடியது. 
  • வெப்பமிகுந்த இடங்களிலும் இன்வர்ட்டரை வைப்பது நல்லதல்ல.. உதராணமாக கேஸ் ஸ்டவ் (Gas stove) உள்ள இடம். அதேபோல தீயை பயன்படுத்தும் இடங்கள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள் போன்ற தீயால் எரியும் விளக்குகள் ஆகியவற்றை இன்வர்ட்டர் அருகில் வைக்க கூடாது. 
  • இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதனுடைய அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட(Permissible speed) , கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக்கூடாது. சிலர் விரைவாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என நினைத்து வேகத்தை கூட்டுவார்கள். ஆனால் அது இன்வர்டர் விரைவிலேயே பழுதாக காரணமாக அமைந்துவிடும். 
  • அதிக நாள் இன்வர்ட்டரை பயன்படுத்தாத சூழலில், அதை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். தூசி, குப்பைகள் போன்றவைகள் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பது நல்லது. 
  • இன்வர்டர் இயக்கத்தில் உள்ளபோது தூசிகளிலிருந்து பாதுகாக்க அதன்மீது எளிதில் தீப்பற்றக்கூடிய துணிகளை போட்டுவைக்க கூடாது. 
  • புதிய இன்வர்ட்டரின் (New inverter)  மீது குப்பைகள் விழாமல் இருக்க ஒரு சிலர் துணி அல்லது அட்டைப்பெட்டிகளால் மூடிவைத்துவிடுவார்கள். அதுபோன்ற செயல்கள் ஆபத்தை உருவாக்கிவிடும். 
மேலும் Inverter UPS வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட Manual Guideல் குறிப்பிடப்பட்டிருக்கும் பராமரிப்பு முறைகளை நன்றாக படித்துணர்ந்து, அதன்படி பராமரிப்பு செய்தால் Power Inveter நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

எப்.எம். ரேடியோவில் ஆர்.டி.எஸ் தொழில்நுட்பம்

சாதாரண மொபைல் போன் முதல் தற்பொழுது பிரபலமாகியுள்ள ஸ்மார்ட்போன்கள் வரை எப்.எம். ரேடியோ வசதி இல்லாத மொபைல்களே இல்லை.
மொபைல்கள் வாங்கும்போது, அதனுடைய மேனுவல் கைடில் அதில் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருப்பார்கள். அதில் FM Radio – RDS என்ற ஒரு குறிப்பையும் பார்க்கலாம்.
எப்.எம். ரேடியோ என்றால் தெரியும். அதென்ன RDS?
RDS என்பது Radio Data Service என்பதன் சுருக்கம். இந்த தகவல்தொழில்நுட்ப நெறிமுறையானது, எப்.எம்.ரேடியோ ஒலிப்பரப்படும்பொழுது, அந்த ரேடியோ நிலையம் குறித்த தகவல்கள் மற்றும் அப்பொழுது ஒலிப்பரப்பபடும் நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகளை டேட்டாவாக அனுப்ப பயன்படும் நுட்பமாகும்.
ஒரு எப்.எம். ரேடியோவை கேட்கும்பொழுது, அந்த நிலைய அறிவிப்பாளர், அந்நிகழ்ச்சிப் பற்றிய குறிப்புகள், ஒலிப்பரப்படும் ரேடியோவின் பெயரை குறிப்பிடும்வரை நமக்கு தெரியாது.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எந்த ஒரு FM Radio நிகழ்ச்சியாக இருந்தாலும், நீங்கள் வைத்திருக்கும் செல்போனில், அதுகுறித்த தகவல்கள் Data வாக உங்களுக்கு காட்டப்படும்.
செல்போன் மட்டுமல்ல.. கார் ஸ்டீரியோக்களிலும் இதுபோன்ற டேட்டாக்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். செல்போனில் RDS வசதியை பெற செட்டிங்சில் RDS Enable செய்திருக்க வேண்டும். அவ்வாறு எனேபில் செய்திருந்தால் எப்.எம்.ரேடியோவில் ஒலிப்பரப்படும் நிகழ்ச்சி, நேரம், நிலையத்தின் பெயர் போன்ற டேட்டாக்களை செல்போனிலேயே தெரிந்துகொள்ளலாம்.
இந்த வசதியுள்ள செல்போன் மற்றும் கார் ஸ்டீரியோக்களில் எப்.எம். ரேடியோவின் அலைவரிசை எல்லையை கடக்கும்பொழுது, அதில் ஒலிப்பரப்படும் அதே நிகழ்ச்சி வேறொரு எப்.எம்.மில் ஒலிப்பரபப்பாகிக் கொண்டிருந்தால் தானாகவே அந்நிகழ்ச்சிக்கு மாறிவிடும். அவ்வாறு மாறுவதற்கும் RDS தொழில்நுட்பமே காரணம்.
ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் ரேடியோ நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படும்பொழுது, இடையே முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியானால், எந்த ஒரு அலைவரிசையில் ரேடியோ ஒலிப்பரப்பாகிக்கொண்டிருந்தாலும், அனைத்து அலைவரிசையிலும் அந்த முக்கியமான அறிவிப்பு ஒலிபரப்பாகும். இதற்கும் இந்த RDS தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது

செல்போன் ரிப்பேரா ஆகிடுச்சா? நீங்களே சரி செய்யலாம்..!

உலகில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் தகுதிக்கு தகுந்த செல்போன்களை பயன்படுத்திக்கொண்டுள்ளனர். செல்போன் இல்லாமல் யாருமே இருப்பதில்லை. 
அவசரத் தேவைக்காக தொலைதூரத்தில் இருப்பவர்களை தொடர்புகொண்டு பேச கண்டுபிடிக்கப்பட்டதுதான் தொலைபேசி. 
அதன் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்து, தற்பொழுது ஸ்மார்ட்போனாக மாற்றம் பெற்றுள்ளது. 
கையடக்கத் தொலைபேசிகளில் Samusng, LG, HTC, Blackberry, iPhone போன்ற ஸ்மார்ட் போன்களும் உண்டும். Sony, Nokia, போன்ற மற்ற நிறுவனங்களின் போன்களும் உண்டும். அதேபோல குறைந்த விலையில் அதிக பயன்பாடுகள்கொண்ட சைனா ரக  Gfive, tinmo, Lephone வகை போன்களும் உண்டு. 
அவரவர்களின் வசதிக்கேற்ப செல்போன்களை வாங்கிப் பயன்படுத்தும் பயனர்கள், தொடர்ச்சியாக தங்களது செல்போன்களை சரியாக பராமரிக்கிறார்களா என்றால் அதுதான்..
தவறுதலாக கீழே போட்டுவிடுவது, தண்ணீரில் நனைத்துவிடுவது, குழைந்தைகளிடம் விளையாட கொடுப்பது, இருக்கையில் செல்போனை வைத்துவிட்டு தவறுதலாக அதன் மீதே உட்கார்ந்துவிடுவது, படுக்கையில் வைத்த செல்போனின் மீது தவறுதலாக படுத்துருள்வது என ஒவ்வொவரும் தங்களது இயல்பிற்கு ஏற்றவாறு சில தவறுகளை செய்கின்றனர். இதனால் செல்போன் பழுதாகி போய்விடும்.
உடனே அதை எடுத்துக்கொண்டு Cellphone Service சென்டருக்குப் போய் அதற்கு 500, 1000, 2000 என செலவு செய்து சரிசெய்வார்கள். 
இதுபோன்ற நிலைமையில் மனிதர்களுக்கு விபத்தில் முதலுதவி செய்வதைப் போல, உங்களுடைய செல்போனுக்கு முதலுதவி செய்து, அவற்றை நீங்களே சரி செய்ய முடியும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் செல்போன் ரிப்பேர் ஆகாமல் பாதுகாக்கலாம்.

Windows XP இன்னும் பயன்படுத்தறீங்களா? ஆபத்து

கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அதுபோல உலக மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Windows Operating System மும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
பழைய விண்டோஸ் ஓ.எஸ். பதிப்புகள் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளாக மாறுவதும், பழைய பதிப்புகள் நீக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன.
அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி பயனர்களைக் கவர்ந்து, இன்றும் கூட பயனர்கள் அதை விட முடியாத நிலையில் உள்ள இயங்குதளம் Windows XP தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
windows-xp-gone
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் ஓ.எஸ்.களில் மிகப்பெரிய அளவில் அதிகமான பயனர்களைப் பெற்றுத் தந்த இயங்குதளம் இது.
2001 ம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1 விட நான்கு பதிப்புகள் முந்தையது ஆகும்.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் இயங்குதளங்களானது , ஆரம்ப கால MS – DOS லிருந்து தற்பொழுது சமீபத்தில் வெளயிடப்பட்ட விண்டோஸ் 8.1 வரை, படிப்படியான மாற்றங்களுக்கு உட்பட்டு, மேம்படுத்தபட்டு வெளிவந்தவை.
ஒவ்வொரு பதிப்பிலும் புதிய நுட்பங்கள், எளிய பயனர் இடைமுகம் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
இதனால் பயனர்கள் பழைய பதிப்பை விட்டுவிட்டு, புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு மாறி வந்தனர்.
விண்டோஸ் OS பதிப்புகள்
ஆரம்ப காலத்திலிருந்து வெளிவந்துள்ள விண்டோஸ் OS பதிப்புகள் (ஆண்டு வாரியாக)
  1. MS-DOS – 1981
  2. Windows 1.0 – 1985
  3. Windows 2.0 – 1988
  4. Windows 2.03, Windows 3.0 – 1990
  5. Windows 3.1 – 1992
  6. Windows NT – 1993
  7. Windows 95 – 1995
  8. Windows 98 – 1998
  9. Windows 2000
  10. Windows XP – 2002
  11. Windows Server 2003
  12. Windows 7 – 2007
  13. Windows 8 – 2008
  14. Windows 8.1
விண்டோஸ் XP சேவை நிறுத்தம்:
இந்தியாவில் மட்டும் உள்ள Windows XP கம்ப்யூட்டர்களை இயக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 1,190 கோடி ரூபாய் செலவானதாகவும், தற்பொழுது வெகு சிலரே விண்டோஸ் எக்ஸ்பி யைப் பயன்டுத்துவதால் அதற்கு 300$ டாலர் செலவாகும் எனவும் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் செலவுகளைக் குறைக்கவும், புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பயன்பாடுகளை (Windows 8.1) அதிகரிக்கவும் இச்சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.
இதனால் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, அடுத்த அடுத்த புதிய பதிப்புகளான Windows 7, Windows 8 , Windows 8.1 பதிப்புகளுக்கு மாறிவிட்டனர்.windows-xp-retired
விண்டோஸ் புதிய பதிப்பிற்கு மாறுவது கட்டாயம்.
ஒரு சிலர் மட்டும் இன்னும் மாறாமல் விண்டோஸ் எக்ஸ்பியிலேயே கணினியை இயக்கிக்கொண்டுள்ளனர். குறிப்பாக அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் உள்ளவர்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி – யை பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற பயனர்கள் 84 சதவிகதம் பேர் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, புதிய பதிப்புக்கு மாறிவிட்டனர். ஏனைய 16 சதவிகிதம் பேர் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
Windows XP இயங்குதளங்களுக்கு புதிய அப்டேட் கிடைக்காத நிலையில் இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் இறுதிக்குள் விண்டோஸ் ஓ.எஸ். -ன் அடுத்தடுத்த புதிய பதிப்புகளுக்கு மாறுவது கட்டாயமாகும். இதனால் இணையம் வழியாக ஏற்படும் வைரஸ் போன்ற பிரச்னைகளிலிருந்து கம்ப்யூட்டர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதோடு, பதிய பதிப்புகளில் உள்ள மேன்படுத்தப்பட்ட வசதிகளை பெற்று பயனடைய முடியும்.