Sunday 24 January 2016

மின் அஞ்சல்கள்: ஆச்சரியமூட்டும் தகவல்கள் :

மின் அஞ்சல்கள் இல்லாத ஓர் இணையத்தை நம்மால் எண்ணிப் பார்க்க இயலுமா?
''அய்யய்யோ'' என்று நீங்கள் கூக்குரலிடுவது கேட்கிறது. ஏனென்றால், மின் அஞ்சல் நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாக மாறி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை எல்லாரும் உணர்ந்துள்ளனர். ஆனால், மின் அஞ்சல்கள் குறித்த சில தகவல்களைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திகைக்க வைத்திடும் தகவல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஒவ்வொரு நாளும், குத்து மதிப்பாக, 20,500 கோடி மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு விநாடியிலும், 24 லட்சம் அஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 90% ஸ்பேம் மெயில்கள் என எடுத்துக் கொண்டாலும், மிஞ்சி நிற்கும் அஞ்சல்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
2. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 91% பேர், தினந்தோறும் ஒரு முறையாவது தங்கள் அஞ்சல் கணக்கைக் காண்கின்றனர். இணையம் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது. இந்த வகையில், மின் அஞ்சல்கள் சரியான இடத்தைப் பிடித்துள்ளன.
3. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 75% பேர் தங்கள் ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்த தகவல் தான், மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பதைக் காட்டியது.
4. ஜிமெயில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு கோடியை எட்டிவிட்டது. இந்த உலகின் ஜனத்தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இவர்களில், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே, இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர் என்பது, பெரும் வியப்புக்குரிய செய்தியே.
5. நல்ல திறமையுடன் மின் அஞ்சல்களை, வர்த்தகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினால், நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும், ரூ.4,500 லாபம் ஈட்டலாம். அதனால் தான், நாம் பல ஸ்பேம் மெயில்களை, நாள்தோறும் பெறுகிறோம்.
என்ன, இந்த தகவல்களைப் படித்து தலை சுற்றுகிறதா? இதில் நாமும் ஓர் அங்கம் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

புதிய பிழைச் செய்தி 451:

இரு வாரங்களுக்கு முன், பிரவுசர் தரும் பொதுவான பிழைச் செய்திகள் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அண்மையில், புதிய எண்ணுடன் கூடிய பிழைச் செய்தி ஒன்றினை, இணையத்தைக் கண்காணிக்கும் பொறியியல் குழு (Internet Engineering Steering Group) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த பிழைச் செய்தி எண் 451. ஏதேனும் இணைய தளப் பக்கங்களை, அரசு நிர்வாகம், மக்கள் பார்க்கக் கூடாதவை என முடிவு செய்து, தடுக்கும் போது, இந்த பிழைச் செய்தி காட்டப்படும். குறிப்பிட்ட இணைய தளத்தினை எந்த அமைப்பு தடுத்துள்ளது என்ற தகவலும், இந்த பிழைச் செய்தியில் காட்டப்படும்.
இந்த பிழைச்செய்தி குறியீடு எண் 451 என ஏன் தரப்பட்டது தெரியுமா? Fahrenheit 451 என்ற புகழ்பெற்ற நாவலை கெளரவப்படுத்தும் வகையில் இந்த எண் தரப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் Ray Bradbury என்பவர். 1953 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் மிகச் சிறந்த படைப்பு என அனைவராலும் பாராட்டு பெற்றது. இதில், அரசின் தீயணைப்பு துறையே, நாட்டில் உள்ள அனைத்து நூல்களையும் நெருப்புக்கு இரையாக்கிவிட்டு, மக்களை தொலைக் காட்சி பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது. இதனால், மக்கள் நூல்களைப் படிக்கும் பழக்கத்தினை மறந்து, டி.வி. காட்சிகளையும், செய்திகளையும் மட்டுமே பார்க்கின்றனர். இது போன்ற ஒரு நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என அறிவுறுத்தும் நாவல் தான் இது. அறிவு சார்ந்த விஷயங்களை அரசு தன் அதிகாரத்தைக் கொண்டு தடை செய்வதனைக் கேலி செய்து எச்சரிக்கும் நாவலாக மக்கள் இதனைக் கருதுகின்றனர்.
இதில் 'பாரன்ஹீட் 451' என்ற வெப்ப நிலை, தாள் தீப்பற்றிக் கொள்ளும் வெப்ப நிலையைக் குறிக்கிறது. இதே பெயரில், 2010 ஆம் ஆண்டில் கம்ப்யூட்டர் கேம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டது.

Saturday 9 January 2016

மொபைல்போனில், 'சிம் கார்டில்' என்னென்ன இருக்கிறது?

'சிம்' கார்டு இல்லாமல் எந்த ஒரு மொபைல் போன் சேவையின் நெட்வொர்க்குடனும் தொடர்பு கொள்ள முடியாது. சிம் உள்ள போனில் எண்களை அழுத்தியதும், என்ன விதமான மொபைல், அதன் தொடர்பு எண் என்ன, யாருக்கு அழைப்பு போகிறது. அது எந்த மொபைல் சேவை, எந்த இடத்திலிருந்து அழைக்கப்படுகிறது போன்ற தகவல்களை பதிவு அறிய சிம்கார்டு உதவுகிறது. 'சிம்' கார்டுக்குள் ஒரு சிலிக்கன் சில்லு இருக்கும். அதை ஒரு கெட்டி பிளாஸ்டிக் அட்டையில் பதித்திருப்பார்கள். சில்லுடன் பதிக்கப்பட்டுள்ள உலோக, 'சர்க்யூட்' மொபைல்போனின் தொடு முனையுடன் பட்டதும் தொடர்பு ஏற்படும். 'சிம்' கார்டுகள், மினி (25 மி.மீ., நீளம், 15 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்), மைக்ரோ (15 மி.மீ., நீளம், 12 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்) மற்றும் நேனோ (12.30 மி.மீ., நீளம், 8.80 மி.மீ., அகலம், 0.67 மி.மீ., தடிமன்) ஆகிய மூன்று அளவுகளில் வருகின்றன.
சிம் கார்டில் ஐ.சி.ஐ.சி.டி., என்ற அடையாளம் காட்டும், 'சர்க்யூட்' இருக்கும். இதில் முதன்மை கணக்கு எண் என்ற 19 இலக்க எண் உள்ளது. மேலும், மொபைல்போன் சேவையைத் தரும் நிறுவனத்தின் அடையாள எண், பயன்படுத்துவோரின் அடையாள எண் ஆகியவை பதிந்திருக்கும்.இது தவிர, ஐ.எம்.எஸ்.ஐ., என்ற சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள எண்ணும் உண்டு. இந்த 19 இலக்க எண்ணில், முதல் மூன்று இலக்கங்கள், ஒரு தேசத்தை குறிக்கும், அடுத்த மூன்று இலக்கங்கள் மொபைல்போன் சேவை நெட்வொர்க்கின் எண்ணை குறிக்கும். அடுத்து சந்தாதாரரின் அடையாள எண் இருக்கும். மேலும், மொபைல்போன் நெட்வொர்க்கில் சிம்கார்டு முறையாக வாங்கப்பட்டது தான் என்பதை அடையாளம் காட்டும், 'ஆத்தென்டிகேஷன்' எண்ணும், 128 'பிட்' தகவலாக பதிவாகியிருக்கும்.
தவிர, குறிப்பிட்ட அளவுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் நீங்கள் பதிந்து வைக்கும் பிறரது மொபைல்போன் எண்கள்
ஆகியவையும் இதில் சேமிக்கப்படும்.